நள்ளிரவில் ஒரு விடியல்
தொழுவத்தில் ஒரு புதையல்!
இருளும் குளிரும்
ஊர் கதை பேச
ஒன்றாய் கூடிய இரவது
ஏழ்மையும் தாழ்மையும்
தூங்க முயன்று
தோற்றுப்போன இரவது!
ஆட்சியரின் அதிகாரமும்
அடிமைகளின் அலறலும்
அடங்க மறுத்த இரவது!
நிலைதளர்ந்த நிறைமாத கர்ப்பிணியும்
இளைப்பாற இடமின்றி
நிர்கதியாய் நின்ற இரவது!
அக்கொடிய நள்ளிரவு
ஒரு குடிலில், நல்லிரவானது!
மாட்டுதொழுவதில்
ஒரு மாசற்ற மாது
மாதவென மாற
விண்ணவனை கண்ட
வியப்பில் விண்மீன்கள்
கண்சிமிட்ட மறந்து
கணப்பொழுது கோளங்கள் ஆக
அசைபோடும் விலங்கினமும்
ஏசுவின் ஆசைமுகம் பார்த்து
அசையாமல் நிற்க
நள்ளிரவில் நடந்தது
ஒரு விடியல்
தொழுவத்தில் பிறந்தது
ஒரு புதையல்
நள்ளிரவில் ஒரு விடியல்
தொழுவத்தில் ஒரு புதையல்!
1 comment:
Very nice i want more
Post a Comment