Friday, January 30, 2009

சிலுவை பாதை பாடல்
உண்மையை உரைக்க வந்தாய்
உம்மையே கையளித்தாய்
கண்கள் கலங்குதையா
கண்ணில் நீரும் நீயுமைய்யா


மன்னிக்கும் மன்னவனே - உனை
தண்டிக்க துணிந்தனரே
தரித்தாய் முள்மகுடம் - உன்
திருமுகமோ ரத்தமயம்


பாவிகள் சுமத்தினரே - சிலுவை
பாவத்தின் அடையாளத்தை
சோர்ந்த உன் தோள்களிலே அது
புனிதத்தின் அடையாளமே

பாறைகள் பாதையிலே - பாதம்
நோக நீ நடந்தாயே
பாவங்கள் உனையழுத்த பாதம்
நழுவி நீ விழுந்தாயே

குழந்தையாய் கையில் உனை - அன்பாய்
தாங்கிய தாய் மரியாள்
குருதியால் நிறைந்த கையில் நீ
தாங்கிய சிலுவை கண்டாள்

தோழர்கள் ஒளிந்திருக்க - உனக்கு
தோள் தர யாருமில்லை
வீரர்கள் வற்புறுத்த சீமோன்
தோள் தந்து தோழனானார்

கனிவான உன் முகமே முழுதும்
புழுதியின் உறைவிடமே
துணிவான ஒரு மனமே - துடைக்க
பதிந்தது உன் உருவே

மீட்பின் மன்னவனே - மண்ணில்
மகிழ்ச்சி மறைந்ததுவே
மீண்டும் விழுந்தாய் நீயும் - மண்ணும்
அன்பாய் அணைத்துவே

அழுகையும் புலம்பலுமாய்
அருகில் பெண்கள் பரிதவிக்க
அழ வேண்டாம் எந்தனுக்காய்
அருள்மொழி நீ கூறி சென்றாய்

கண்களும் இருண்டனவே - உந்தன்
கால்களும் துவண்டனவே
காய்ந்த புண்கள் எல்லாம்
திறந்தனவே மறுமுறை விழ

இரத்தத்தில் நனைந்த உந்தன் - மேல்
ஆடையை களைந்தனரே
அவமான உச்சத்திலும்
அன்பை ஆடையாய் அணிந்தாயே

குணமாக்கிய உன் கைகளில் - பாதை
வகுத்த உன் பாதங்களில்
ஆழமாய் ஆணிகளால்
சிலுவையில் அறைந்தனரே

தாளாத வேதனையில் - உந்தன்
தந்தையை நீ அழைத்தாய்
தரணியே தவிக்குதையா
உன்னதன் உயிர் பிரிந்தாய்

மகனை மடியில் சாய்த்து - அன்று
ஆராரோ பாடிய தாய்
மகன் மரித்து மடியில் சாய
ஆறாத வேதனையில்

கடலளவு அன்பு செய்தாய்
கல்லறையும் கடனாய் பெற்றாய்
கல்நெஞ்சும் கரையுமையா - உன்
தியாகத்தை தியானம் செய்தால்